28/03/2026
கருவிதைப்பையின் வெற்றிப் பயணம்—-2
இடம் மாறிய உதிர திசுக்கள் கருவிதைப்பை உள்ளே::
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
ஆடி மாதம் இனியகாலைப் பொழுது
வாரத்தின் முதல் நாள் ஒருவித சோம்பலான நிலையில் வெளிப்புற நோயாளிகளை பார்க்க ஆரம்பித்தேன்.
பழகிய முகம் சிறு தயக்கத்தோடு இன்னும் இருவரோடு நுழைகிறார். வந்தவர்களை இருக்கையில் அமரச்செய்து வந்த காரணமறிய முற்பட்டேன்.
பழகிய முகம் ஆரம்பித்தது என் மகனுக்கு கல்யாணம் நிச்சயித்து உள்ளோம் என்று.
மகிழ்வோடு நான் வாழ்த்துக்களை பகிர்ந்தேன்.
ஆனால் ஒரு சிறிய சங்கடம் என்றார். இப்பெண் தான் என்று அருகிலமர்ந்த மங்கையை காண்பித்தார்.
துடிப்பான நிறைந்த அழகோடு அப்பெண் பதுமையாய்
பயமோடு எனனை நோக்கினார்.
கையில் நுண்ணொலி பரிசோதனையின் முடிவுகள்.
பரிதவிப்போடு என்னிடம் கொடுத்தார்
வாங்கி பார்த்து ஆராய்ந்ததில் இடமாறிய உதிர திசுக்கள் கருவிதைப்பையில் கட்டியாக ( 15X10 Cm) உருமாறி இருக்கிறது என அறிந்தேன்.
அடுக்கடுக்காய் வினா எழுப்பினர்
குழந்தை பிறக்குமா? கருப்பை வலுவாக இருக்கிறதா? கரு முட்டை வளர்ச்சி இயல்பாக இருக்குமா?
என்னிடம் புன்னகை மட்டுமே பதிலாக.
பொறுமையாக இருங்கள் எனக்கூறி
அடுத்த கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு கட்டி இடமாறிய உதிரகட்டி என உறுதி செய்து கொண்டேன்.
தகுந்த ஆலோசனைகளை அளித்து துவாரவழி அறுவை சிகிச்சையின் மூலம் கட்டி மட்டும் அகற்றப்பட்டது.வெற்றிகரமான அறுவை சிகிச்சை. ஆனால் அந்த கட்டியின் தன்மையோ தொடர்ந்து வளரக்கூடிய ஒன்று.
இயற்கையாக கிடைக்கும் நிவாரணம் கர்ப்பம் தரிப்பதாலும் மற்றும் மாதவிலக்கு முற்றிலும் நிற்பதாலும் மட்டுமே கிடைக்கும்.
வருங்கால மாமியார் மற்றும் கணவர் இருவருக்கும் மன ஊக்கமடையும் வார்த்தைகளை பேசி நம்பிக்கை அளித்தேன்.
கல்யாணம் முடிந்து மூன்றாவது மாதம் மங்கை வந்தார் சிறுநீரக பரிசோதனையில் கர்ப்பம் உறுதியானது.
மகிழ்வான தருணம் எனக்கும் மங்கையின் குடும்பத்தினர்க்கும்.குதூகலமான கர்ப்பகாலம்
நிறை மாதமும் வந்தது பனிக்குடம் உடைந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் இளங்காலைப் பொழுதில் வந்தாள்.
பிரசவ வலியும் வந்தது.நண்பகலில் அழகான பெண்குழந்தைக்கு தாயானாள்.
உயரமோ குறைவு ஆனால் சுக பிரசவம்.
காரணம் கர்ப்பகாலத்தில் மங்கை மாண்போடு செய்த உடற்பயிற்சிகள் மற்றும் மனநிறைவோட பின்பற்றிய உணவுமுறை அறிவுரைகள்
என்னுள்ளே பின்னோக்கி எண்ண அலைகள்.இடமாறிய உதிரக்கட்டி இருப்பவர்களுக்கு இயல்பாக குழந்தை நிற்பது அறிது.மங்கை விதிவிலக்கு.
இங்கு மங்கை மற்றும் குடும்பத்தினரின் நேர்மறை எண்ணங்களும் நம்பிக்கையுமே வெற்றியை தந்தது.
மருத்துவர்.இந்திரா நெடுமாறன்
23.04.20