12/09/2025
🌸 தீபாவளி நினைவுகள் 🌸
“தீபாவளி வரப்போகுது!” — இந்த ஒரு சொல்லுக்கே பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் வீட்டில் ஒரு மாதம் முன்னாலேயே பரபரப்பா தயாரிப்பு ஆரம்பிச்சிருக்கும்
“முறுக்கு,அதிரசத்துக்கு எல்லாம் நல்ல குண்டா உள்ள அரிசியா பாத்து வாங்கணும் அதுதான் மாவு கணிசம் குடுக்கும்னு பாட்டி சொல்லுவாங்க.
“அதிரசத்துக்கு நல்ல கலர்-ஆ உள்ள வெல்லம் வாங்கணும் . மனகோலம் செய்ய கொஞ்சம் கலர் கம்மியா உள்ள வெல்லம் வாங்கணும் அப்போதான் பாக்க நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க.”
பாட்டியும் அம்மாவும் சேர்ந்து கடை கடையா போய் பாத்து வாங்கீட்டு வருவாங்க. பாவம் கடைக்காரர் பாடு.
பாட்டி பத்து நாள் முன்னாலேயே அரிசி எல்லாம் நன்கு கழுவி, சுத்தப்படுத்தி, காயவைத்து வைப்பாங்க. உளுந்து **தங்க நிறம்** வரவரை வறுக்கணும் அப்போதான் முறுக்கு நல்ல மனமா பொறு பொறுனு வரும்னு சொல்லுவாங்க,
“அடுத்து நமக்கு வேலை வந்துரும் . பாட்டி கூட மாவு மில்லுக்கு போறது அதை சைக்கிள் ல வச்சு தூக்கீட்டு வர்ரது நாம டிபார்ட்மெண்ட்.
அங்க போன நமக்கு முன்னாடியே நாலு பேரு இருப்பாங்க. எங்க பாட்டி எப்படி ஆளுனா கையோட ஒரு கிலோ பச்சரிசி எடுத்துட்டு வந்துருவாங்க. ஏன்னு ? கேட்டா மத்த மாவு போட்ட மெஷின்-ல முறுக்கு மாவுக்கு அரைச்சா நல்லா வராதாம். முதல்-ல பச்சரிசியை போட்டுட்டு அப்புறம் முறுக்கு மாவை போட சொல்லுவாங்க அப்புறம் , மாவு உருண்டைக்கு , ஓல பகோடா (ரிப்பன் பகோடா ) எல்லாம் அரைக்கணும். மாவரைக்க ஒரு கூட்டம் னா அதை காய போடுற இடத்துல அதை விட கூட்டமா இருக்கும். எல்லாத்துக்கும் அரைச்சு வீடு வந்து சேர பாதி நாள் ஆகிடும்.
தீபாவளிக்கு முந்தின நாள் கண்டிப்பா ஸ்கூல் கட். அம்மா அரிசி, வெல்லம் எல்லாம் சேர்த்து அதிரசத்துக்கான மாவு செய்து வைப்பாங்க. அதிரசமாவு சேர்க்கும் போதே தனி மணமா இருக்கும். அம்மாக்கு தெரியாம அதை எடுத்து சாப்பிடுறதுல உள்ள சுகமே தனி.
“எண்ணெயில் சுடாமல் சாப்பிட்டா வயிறு வலிக்கும்” னு சொல்லுவாங்க. நம்ம அதெல்லாம் காதுல வாங்குவோமா?
பாட்டி காலை- ல ஐந்து மணிக்கே எழுந்து ** முறுக்கு ** சுட ஆரம்பிச்சிடுவாங்க. “சூரியன் வர்ரதுக்குள்ள சுட்டு வைக்கணும், இல்லைனா முறுக்கு சிவந்து போயிரும்- னு” சொல்லுவாங்க.
முறுக்கு, மனகோலம், மாவுருண்டை எல்லாம் பெரிய டிரம்மில் அடுக்கி வைப்பாங்க. அதிரசம் மட்டும் கடைசியில் செய்வாங்க. அதிரசம் தட்டி முடிக்கும்போது இரவு ஆகிடும்.
எங்களுக்கு பிடிச்சது என்ன தெரியுமா? —
பாட்டி ** சுட சுட ** கொடுக்கும் * பச்சை முறுக்கு (half boil murukku )*! அது நூடுல்ஸ் மாதிரி மெலிதா இருக்கும், முறுக்கு மாதிரி மொறு மொறுப்பா இருக்காது. ஆனா அந்த சுவை வேற மாதிரி டேஸ்ட்-ஆ இருக்கும்.
அதிரசம்-அ சுட சுட மொறு மொறு னு சாப்பிடும் போது இருக்குற டேஸ்ட் இருக்கே வேற லெவல் . மாவு உருண்டை செய்யும் போது நெய்ய காய்ச்சி மாவுல ஊத்தும் போது வர சுறு சுறு சத்தமும் பாசிப்பருப்பு மாவோட நெய் சேரும் போது வர நறுமணமே தனி லெவல் தான்.
அந்த சுவை, அந்த மணம், அந்த பாசம்—இவையே நம்ம பழைய தீபாவளியின் உண்மையான இனிப்பு.
👉 உங்களுக்கும் இப்படிப் பட்ட தீபாவளி நினைவுகள் இருக்கா? 😊💭