28/11/2022
"நாம் பயன்படுத்தும் நெகிழி பைகள் மக்கி போக பலநூறு ஆண்டுகள் ஆகும்" என்று ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு ஆசிரியர் சொன்னதாக நினைவில் உள்ளது. சிலர் ஐநூறு ஆண்டுகள் என்றும், வேறு சிலர் ஐந்தாயிரம் ஆண்டுகள் என்றும் கூறுகின்றனர். கிட்டத்தட்ட எந்த வகையான பிளாஸ்டிக்கும் மக்கி போவதில்லை.
ஒரு பிளாட்டிக் பூந்தொட்டியில் செடி வைத்திருந்தால், வெயிலில் காய்ந்தும் மழையில் மழையில் நனைந்தும் இருக்க வேண்டிய அந்த தொட்டி, இரண்டு வருடத்தில், அப்பளம் போல சொடக் சொடக் என்று நொறுங்க தொடங்கி விடுகிறது. சூரிய ஒளியின் புற ஊதா கதிர்களால் அது அதிகமாகவே பாதிக்கப்படுகிறது.
அதே போல தரையில் நடப்படும் ஒரு கம்பத்தை கரையான் அரிக்கக்கூடாது என்பதற்காக அடிப்புறத்தில் பிளாஸ்டிக் பைகளை சுத்தி நடுவார்கள். ஆனால் அதுவும் அதிக நாட்கள் ஆகும்போது சற்றே சிதைய ஆரம்பித்து விடுகிறது. இயற்கையான கழிவுகளை போல மக்கி போவதில்லை என்பது உண்மைதான், ஆனால் மக்கவே மக்காது என்பது உண்மையில்லை.
சரி, பிளாஷ்டிக்கும் மக்கும் என்றால், தைரியமாக நாம் பயன்படுத்தலாம்தானே? நமது சூழல் அதனால் கெடாது தானே?.
பிளாஷ்டிக்கும் மக்கும். இயற்கையில் சிதையும். ஆனால் இயற்கையான கழிவுகளை விட அதிக நாட்கள் எடுக்கும். அதனால் யாருக்கு நஷ்டம்?
பிளாஸ்டிக் பயன்பாட்டினால் சுற்றுசூழல் பாதிக்கப்படும், பூமியை மெதுமெதுவாக நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம். நாம் பூமியை காப்பாற்ற வேண்டும் என்று பலர் இப்போது சொல்கிறார்கள். இதிலே பாதி உண்மை, பாதி பொய்.
சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்பது உண்மை. ஆனால் நாம் பூமியை அழிக்கவில்லை. அழிக்கவும் முடியாது. எந்த விஷயத்தை மனிதன் படைக்கவில்லையோ, அந்த விஷயத்தை மனிதனால் அழித்துவிடவும் முடியாது. இந்த பூமியும் மனிதனால் அழிக்கப்பட முடியாத ஒன்று.
பிளாஸ்டிக் பொருட்களை மக்கவைக்கும், பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிடும் கிருமி கூட இருக்கிறதாம். விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். விஞ்ஞானிகள் அதை தயாரிக்கவில்லை. இயற்கையிலேயே அந்த கிருமி இருக்கிறது. அதை 2016ல் ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
பூமி உருவான காலத்தில் இருந்து இன்று வரை உள்ள காலத்தை 24 மணி நேரமாக கணக்கிட்டால், அதில் மனிதன் உருவான காலம் 23 மணிநேரம், 59 நிமிடம், 56 வினாடிகள் ஆகும். அதாவது அந்த 24 மணிநேரத்தில் கடைசி 4 வினாடிகள் மட்டுமே மனித சமுதாயத்தின் மொத்த வரலாறு.
அந்த நான்கு வினாடி காலத்திற்குள்தான் குரங்கு மனிதன், ஆதி மனிதன், நாடோடி மனிதன், விவசாயத்தை கண்டுபிடித்தவன், லெமூரியாவில் வாழ்ந்தவன், அரசாட்சியை உருவாக்கியவன், அறிவியல் விஞ்ஞானி, நவீன மனிதன் என அனைவருமே இருக்கிறான். அப்படியானால் அந்த 24 மணி நேரத்தில் எத்தனை உயிர்கள் இந்த உலகில் வந்து போயிருக்கும்? எத்தனை மாற்றங்களை பூமி கண்டிருக்கும்?.
தன்னை எதிர்த்து வரும் ஒரு அச்சுறுத்தலை சமாளிக்க, அதை எதிர்கொள்ள பூமிக்கு நன்றாக தெரியும். மேலும் பிளாஸ்டிக் பூமிக்கு அச்சுறுத்தல் அல்ல. நமக்கான அச்சுறுத்தல்.