25/08/2026
'தாய்மாமன்' தங்க மோதிரம் திட்டம்: டாக்டர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை https://www.etvbharat.com/ta/state/doctors-association-urges-implementation-of-thai-maman-gold-ring-scheme-through-banks-tns26082502849
اردو
ETV Bharat / state
'தாய்மாமன்' தங்க மோதிரம் திட்டம்: டாக்டர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை
By ETV Bharat Tamil Nadu Team
Published : August 25, 2026 at 6:00 PM IST
சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மோதிரங்களை மருத்துவர்கள் வாயிலாக அல்லாமல் வங்கிகள் வாயிலாக வழங்க வேண்டும் மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை கௌரவிக்கும் விதமாக ஆளும் தவெக அரசு தாய்மான் தங்க மோதிரம் திட்டத்தை செயலாக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இதன் வாயிலாக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு தங்க மோதிரம் வழங்க உள்ளது. ஜுன் 22 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. ஆகையால், ஜுன் மாதத்திலிருந்து நான்கு மாதங்களுக்கு தேவையான 1 லட்சத்து 28 ஆயிரத்து 499 தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு வழங்க இரண்டு தங்க நகை விற்பனையாளர்களை அரசு தேர்வு செய்துள்ளது.
இந்த நிலையில், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் அளிக்கும் திட்டத்தை அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் மனப்பூர்வமாக வரவேற்கின்றது. அரசு மருத்துவமனையில் பிரசவங்களை ஊக்குவிக்கவும் குறைந்து வரும் மக்கள்தொகையை சரி செய்ய அரசு ஏற்படுத்தி வரும் இந்த தங்க மோதிரம் திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதேசமயம், மருத்துவமனை மூலமாகவே பயனாளிகளுக்கு வழங்கப்படும் திட்டத்தில் ஏற்படக்கூடிய சில பாதகங்களை தெரிவிக்கும் கடமை எங்களுக்கு உள்ளது. தங்கம் பாதுகாப்பான பெட்டகத்தில் வைக்கப்பட்டு அதற்கு 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவலாளிகள் வைக்கப்பட வேண்டும். சிசிடிவி பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
மேலும், இதற்கு தனியாக ஒரு அலுவலர் பொறுப்பாக நியமிக்கப்பட வேண்டும். மருத்துவ கல்லூரியில் அல்லது மாவட்ட மருத்துவமனையில் தலைமை மருத்துவர் அதனை ஒவ்வொரு நாளும் திறந்து கணக்கு எடுத்து அதனை பிரசவ அறை அருகில் உள்ள மோதிரம் வழங்கும் இடத்திற்கு சென்று அங்குள்ள பொறுப்பதிகாரிகள் உடன் பயனாளிகளை சரி பார்த்து அன்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.
மேலும், அந்த மாவட்டத்தில் உள்ள சராசரியாக 5 முதல் 20 அரசு மருத்துவமனைக்கு இங்கிருந்து ஆயுதம் தாங்கிய வண்டியில் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் ஒரு அலுவலர், ஒரு ஆயுதம் தாங்கிய காவலாளியுடன் மோதிரங்களை எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு சென்று மருத்துவ பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ஒரு பொறுப்பு அதிகாரியிடம் கொடுக்கப்பட வேண்டும். அதனை அங்கு சிசிடிவி முன்னிலையில் மற்ற ஆதார் மற்றும் பிக்மி எண் மூலமாக பயனாளிகளை அடையாளம் கண்ட அன்றே வழங்கப்பட வேண்டும்.
இந்த செயல் திட்டத்தால் ஒவ்வொரு நாளும் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இதற்காக ஒதுக்கப்பட வேண்டியது கட்டாயமாகி உள்ளது. அதுமட்டுமின்றி, இதற்காக புதிதாக பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்படுவதுடன், ஆயுதம் தாங்கிய காவலாளிகள், சிசிடிவி மற்றும் அதை கண்காணிப்பு செய்வதற்கு காவலர் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது.
மருத்துவமனையின் நிர்வாக இடத்தில் இருந்து பிரசவ இடத்திற்கு செல்ல தேவையான காவல் நடவடிக்கைகள், அந்த மாவட்டத்தில் உள்ள அன்று பிரசவம் நடந்த இடத்திற்கு செல்ல தேவையான காவலர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வண்டி இவை அனைத்தும் புதிதாக நிறுவப்பட வேண்டும். இவ்வாறு செய்வதினால் மருத்துவ சிகிச்சையில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
அத்துடன், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் 0.66 சதவீதம் மட்டுமே நிர்வாகச் செலவுகளுக்காக ஒதுக்கி உள்ளது. ஆனால் கணக்கிட்டு பார்த்தால் கூடுதலாக ஏறக்குறைய 2 சதவீதம் வரை செலவழிக்கப்பட வேண்டி இருக்கின்றது. அதுமட்டுமின்றி உயிர் காக்கும் பணியில் உள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் இந்த வேலைக்கு தினம் தினம் நேரம் ஒதுக்கி பணியை மேற்பார்வை செய்ய வேண்டும்.
இதற்கான செலவினங்கள் முதலமைச்சர் காப்பீடு திட்டம் மூலம் சிகிச்சை அளித்து பெறப்படும் தொகையில் செய்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் மருத்துவமனைக்கு செலவிடப்படும் நிதி ஆதாரம் பாதிக்கப்படும். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருக்கும் ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்களை தங்க மோதிர திட்டத்தின் பொறுப்பாளர்களாக உட்படுத்தும்போது சுகாதார மற்றும் மருத்துவ சேவையில் தொய்வு ஏற்படும்.